சோலாப்புரி என்ற சிற்றூரில் ஒரு தொப்பி வியாபாரி இருந்தார். அவரிடம் அதிகமான வண்ணங்களில் அழகழகான தொப்பிகள் இருந்தன. அவர் அன்று பக்கத்துக்கு ஊரான சித்தூரில் தொப்பிகள் விற்க செல்வதற்காக புறப்பட்டார். அவர் சித்தூரிற்கு செல்ல சமர்வன காட்டை கடந்து செல்ல வேண்டி இருந்தது.
வியாபாரி தொப்பி இருந்தப் பெட்டியை தலையில் தூக்கி வைத்து நடக்க தொடங்கினார். அவர் காட்டின் பாதி தூரம் வந்த போது அவருக்கு களைப்பாக இருக்கவே, ஓய்வெடுக்க ஒரு மரத்தடியில் பெட்டியை வைத்து விட்டு சற்று கண்ணயர்ந்தார். தூக்கம் கலைந்து எழுந்தபோது அவரது பெட்டி காலியாக இருந்தது, அதிலிருந்த வண்ண தொப்பிகளை காணவில்லை.
அவருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. வியாபாரி தொப்பியை யார் எடுத்தது என்று அக்கம் பக்கம் தேடினார். அங்கு யாரையும் காணவில்லை , காடே அமைதியாக இருந்தது. அந்த சமயத்தில் மரத்தின் மேலிருந்து அவரது தலை மேலே ஒரு பழம் வந்து விழுந்தது. அவர் வலி பொறுக்கமுடியாமல், ஆ! என கத்தியவாறே சட்டென மேலே பார்த்தார்.
என்ன ஒரு ஆச்சர்யம்! அங்கே எல்லா கிளைகளிலும் குரங்குகள் அவரது வண்ண தொப்பிகளை தலையில் வைத்துக்கொண்டு கிளைக்கு கிளை தாவியபடி விளையாடிக்கொண்டு இருந்தன. சிறிது நேரம் அப்படியே ஆச்சர்யப்பட்டு நிற்றுவிட்டார். அந்த நேரத்தில் எல்லா குரங்குகளும் அவரையே பார்த்து கொண்டிருந்தன.
அவருக்கு என்ன செய்வதென்றே தெரியாமல், கையை மேலே தூக்கினார். உடனே எல்லா குரங்குகளும் கையை மேலே தூக்கின. வியாபாரி மெதுவாக கையை இறக்கி மூக்கை தொட்டார். உடனே எல்லா குரங்குகளும் மூக்கை தொட்டன.
வியாபாரிக்கு ஒரு எண்ணம் தோன்றியது, அவரது தலையில் இருந்த தொப்பியை எடுத்து கீழே போட்டார். உடனே எல்லா முட்டாள் குரங்குகளும் தலையில் இருந்த தொப்பியை எடுத்து கீழே போட்டன. போட்டதுதான் தாமதம் வியாபாரி எல்லா தொப்பிகளை அவசரமாக எடுத்து பெட்டியில் போட்டுகொண்டு அந்த இடத்தை விட்டு ஓடினார்.
அதன் பிறகு, அவர் அந்த சமர்வன காட்டு பக்கம் வந்தால் எவ்வளவு களைப்பாக இருந்தாலும் தூங்குவதே இல்லை. அவருக்கு அந்த பழைய நினைவுகளே மனதில் வந்து போயின.
Superb akka
ReplyDelete